இலங்கை மக்கள் ராணுவத்திற்கும் காவல் துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ராணுவ தலைமைத் தளபதி ஷவேந்திர சில்வா வேண்டுகோள் வைத்துள்ளார்.
மேலும் நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சட்டம் ஒழுங்கை காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் ராணுவத்திற்கும், காவல் துறையினருக்கும் எதிராக நடந்துகொள்ள வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவதற்கே திண்டாடி வருகின்றனர். பொருளாதார நெருக்கடியை சரி செய்யாத அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மற்றும் அதிபர் இல்லங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து தற்போது பிரதமர் அலுவலகத்திலும் பொதுமக்கள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை மக்கள் ராணுவத்திற்கும் காவல் துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ராணுவ தலைமைத் தளபதி ஷவேந்திர சில்வா வேண்டுகோள் வைத்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் நுழைய முயன்றபோது ராணுவத்திற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 24 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கை காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் ராணுவத்திற்கும், காவல் துறையினருக்கும் எதிராக நடந்துகொள்ள வேண்டாம் எனவும் ஷவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.