‘அவைக்குள் பதாகைகள் கொண்டுவர அனுமதி இல்லை’: மக்களவைத் தலைவர்
மக்களவைக்குள் பாதகைகள் கொண்டுவர விதிகளில் அனுமதி இல்லை என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் முதல் நாள் கூட்டம் நாள் முழுவதும் முடங்கின.
இரண்டாம் நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியவுடன், விலை உயர்வு, பணவீக்கம், அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க இரு அவைகளில் எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை அவைத் தலைவர்கள் நிராகரித்ததால், இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். மக்களவையில் பதாகைகளை ஏந்தி அவைத் தலைவரின் இருக்கை அருகே வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அப்போது, விதிகளின்படி அவைக்குள் பதாகைகளை கொண்டு வர அனுமதி இல்லை எனத் தெரிவித்த ஓம் பிர்லா, பிற்பகல் 2 மணி வரை மக்களவையை ஒத்திவைத்தார்.