புது தில்லி: இந்தியாவில் 200 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்தி மற்றொரு மைல்கல்லைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனா் பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு ஒரு ஆண்டு கழித்து, நாடு 18 மாதங்களில் 200 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்தி மற்றொரு மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்தியா மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில், "இந்தியா மீண்டும் சரித்திரம் படைக்கிறது! 200 கோடி தடுப்பூசி அளவைத் தாண்டிய அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்துகள். இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை அளவிலும் வேகத்திலும் இணையற்றதாக மாற்ற பங்களித்தவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இது கரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்தி இருப்பதாக" மோடி தெரிவித்திருந்தார்.
சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "வரலாற்றை உருவாக்குங்கள்! பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா 200 கோடி கரோனா தடுப்பூசி இலக்கை அடைய தயாராக உள்ளது! கவுண்ட்டவுன் தொடங்குகிறது." என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க | இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், செவ்வாய்க்கிழமை நாட்டில் செலுத்தப்பட்ட ஒட்டுமொத்த கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 200.33 கோடியைத் தாண்டியுள்ளது என்று கூறியிருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் 200 கோடி கரோனா தடுப்பூசிகளை செலுத்தி மற்றொரு மைல்கல்லைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனா் பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், "200 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி சிறந்த நிர்வாகத்தின் மற்றொரு மைல்கல்லைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். கரோனா தாக்கத்தைத் தணித்ததற்காக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய அரசாங்கத்துடனான தொடர்ச்சியான கூட்டாண்மைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.