உடுப்பி: கர்நாடக மாநிலம் பைந்தூர் அருகே, அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ், சுங்கச்சாவடி அருகே மோதி விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த ஓட்டுநர் உள்பட 4 பேரும் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
மிக மோசமான சாலை விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் அளவுக்கு இந்த விபத்துக் காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கிறது.
நோயாளி மற்றும் அவர்களது உறவினர்களுடன் மிக வேகமாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடுகிறது.
இது குறித்து அறிந்த பைந்தூர் சுங்கச்சாவடி ஊழியர்கள், சாலைத் தடுப்புகளை வேகமாக அகற்றுகிறார்கள். ஆனால் அதற்குள் அந்த ஆம்புலன்ஸ் சுங்கச்சாவடியைக் கடக்க முயல்கிறது.
வேகமாக வந்த ஆம்புலன்ஸ் சுங்கச்சாவடி மீது மோதி சுக்குநூறாக, அதிலிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில், சுங்கச் சாவடி ஊழியர்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்துக்காட்சி முழுக்க சுங்கச்சாவடியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, நேற்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இந்த ஆம்புலன்ஸ் சுங்கச்சுவாடியின் ஒரு துணில் சென்று இடிப்பதற்கு முன்பு, அது சுழன்ற வேகத்தில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளியும் உறவினரும் தூக்கி வீசப்படுகிறார்கள். இதில், சுங்கச்சாவடி ஊழியர்களும் படுகாயமடைந்தனர்.