ராஜஸ்தானில் உள்ள "அப்னாகர் ஆசிரமத்தில்" நஞ்சான உணவை சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர். 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டாவில் அப்னா கர் ஆசிரமம் ஒன்று இயங்கி வருகின்றது. இந்த ஆசிரமத்தில் முதியோர், உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் எனப் பலர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று உணவு உட்கொண்ட சிலர் படுகையை விட்டு எழுந்திருக்காத நிலையில், சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஓம் பிரகாஷ் பங்கர் கூறுகையில், ஆசிரமத்தில் உட்கொண்ட உணவு மற்றும் நீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீர் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றார்.
சம்பவ இடத்தில் மருத்துவக் குழு கண்காணிப்பில் உள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி பூபேந்தர் சிங் தோமர் கூறியுள்ளார்.