நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 3 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது.
இந்நிலையில், இன்று காலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றதால், நாடாளுமன்ற அலுவல்கள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கின.
கூட்டம் தொடங்கியவுடன், இரு அவைகளிலும் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி பதாகைகளுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பிற்பகல் 3 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.