குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பேச்சு தன்னை மிகவும் கவர்ந்ததாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு இன்று பதவியேற்றுக்கொண்டார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் திரௌபதி முா்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள், ஆளுநா்கள், மாநில முதல்வா்கள், முப்படை தலைமை தளபதிகள்-மூத்த தளபதிகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
குடியரசு தலைவராக பொறுப்பேற்ற திரெளபதி முர்முவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் பதவியை ஏற்கும் முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், விழாவில் பங்கேற்ற ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட், முர்முவின் பேச்சு தன்னை மிகவும் கவர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் முதல் உரையில், அவரது பேச்சில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் இருந்தது. அவரது பேச்சு என்னை மிகவும் கவர்ந்துள்ளது. பழங்குடியின பெண் ஒருவர் தெரிவித்த கருத்துகள் பாராட்டுக்குரியவை. இன்று அவர் தேசத்திற்கு செய்த உறுதியை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முா்மு