லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் கைதான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூா் கெரியில் கடந்த அக் 3-ஆம் தேதி பாஜகவினரின் கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் இதே அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மேல்முறையீடு செய்யவே, உச்சநீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றம் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | தில்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது!