போபால்: சுள்ளி பொறுக்கச் சென்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கோடீஸ்வரர் ஆன கதையைத்தான் மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்ட மக்கள் பேசிப் பேசி ஓய்கிறார்கள்.
வழக்கம் போல அடுப்புக்குப் பயன்படும் சுள்ளிகளைப் பொறுக்கி வர பன்னா மாவட்டத்தில் உள்ள ஒரு வனப்பகுதிக்குச் சென்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கண்ணில் பட்டு மின்னிக் கொண்டிருந்த ஒரு கல்லை எடுத்துப் பார்த்தார். ஆனால் சத்தியமாக அப்போது அவருக்குத் தெரிந்திருக்காது, இது நாடே நம்மைப் பற்றி பேச வைக்கப் போகிறது என்று. அதனை தனது கூடையில் போட்டுக்கொண்டு சுள்ளிகளையும் பொறுக்கி தலையில் வைத்துக் கொண்டு வீடடைந்தார்.
இதையும் படிக்க.. அர்பிதா முகர்ஜி வீடா அல்லது அலி பாபா குகையா? வியக்கும் அதிகாரிகள்
தனது கணவரிடம் அந்த கல்லைக் காட்டியபோது, அவருக்குத் தெரிந்துவிட்டது. இது சாதாரண கல் அல்ல என்று. உடனடியாக அதனை எடுத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றார். அங்கிருக்கும் அதிகாரிகளிடம் காடடினார். அதனை பரிசோதித்த அதிகாரிகள் அது 4.39 காரட் வைரம் என்று உறுதி செய்தனர்.
வைர ஆய்வாளர் அனுபம் சிங் அதனை பரிசோதித்து உரிய நடைமுறைகளை முடித்து ஏலம் விட ஏற்பாடு செய்தார். மாநில அரசுக்கான வரிகள் போக மிச்சமிருக்கும் தொகை ஜெண்டா பாயிடம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
நான்கு மகன்கள், 2 மகள்களுடன் வசிக்கும் ஜெண்டா தம்பதி, தங்களுக்காக பெரிய வீடு ஒன்றைக் கட்டப்போவதகாவும், மிச்சத் தொகையை மகள்களின் திருமணத்துக்காக சேமிக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.
புருஷோத்தம்பூர் பகுதியைச் சேர்ந்த இவர், கூலி வேலை செய்வதோடு, வனப்பகுதியிலிருந்து சுள்ளிகளைப் பொறுக்கிவந்து அதனை விற்று வருவாய் ஈட்டிவந்தார்.
இந்த நிலையில்தான், கண்ணில் பட்ட வைரக் கல் தங்களது வாழ்க்கையையே மாற்றிவிட்டதாக மகிழ்ச்சிப் பொங்கக் கூறுகிறார். பன்னா மாவட்டம் வைர சுரங்கங்கள் நிறைந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.