ராஜஸ்தானி, குஜராத்திகள் குறித்த மும்பை கருத்துக்கு, மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை, சிவ சேனை தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமரிசித்துள்ளார்.
மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அண்மையில் பேசிய பேச்சுத்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கு கடும் சொற்களால் உத்தவ் தாக்கரே தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
அதாவது, மகாராஷ்டிரத்தை விட்டு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த மக்கள் மும்பையை விட்டு வெளியேற முடிவெடுத்துவிட்டால், நாட்டின் வணிக தலைநகராக மும்பை இருக்காது என்று கூறியுள்ளார்.
மேலும் கோஷியாரி கூறுகையில், நான் எப்போதம் மக்களிடம் சொல்லிக் கொண்டேயிருப்பேன். மகாராஷ்டிரத்தில் குறிப்பாக தாணே மற்றும் மும்பையிலிருந்து குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி மக்களை வெளியேறுமாறு கூறினால், பிறகு மும்பையில் பணமே இருக்காது. அதன்பிறகு, நாட்டின் வணிக தலைநகராகவும் மும்பை இருக்காது என்று கூறியுள்ளார்.
இது குறித்து உத்தவ் தாக்கரே கூறியதாவது, மகாராஷ்டிர ஆளுநராக பகத் சிங் கோஷியாரி இதுவரை விருந்து உபசாரங்கள் என கடந்த 2.5 ஆண்டுகளாக மகாராஷ்டிரத்தின் அனைத்து விஷயங்களையும் நன்கு அனுபவித்தார், தற்போது அவர் கோல்ஹாபூர் காலணியை பார்க்கும் நேரம் வந்திருக்கிறது என்று கடும் சொற்களால் பேசியுள்ளார்.
ஆளுநர் பதவி என்பது மிகவும் மரியாதைக்குரியது. அதனை அவமரியாதை செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், பகத் சிங் கோஷியாரி, ஆளுநர் பதவியில் இருந்து கொண்டே, அந்தப் பதவியை அவமரியாதை செய்கிறார். மராத்தி மக்களை அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது அவரது பேச்சு என்றும் உத்தவ் தெரிவித்துள்ளார்.