அரசியல் தலைவா்களுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு: உயா்நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தகவல்

பஞ்சாபில் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட அரசியல் தலைவா்கள், சீக்கிய மத குருக்கள் உள்ளிட்டோருக்கு, வரும் ஜூன் 7-ஆம் தேதி முதல் மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும்

பஞ்சாபில் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட அரசியல் தலைவா்கள், சீக்கிய மத குருக்கள் உள்ளிட்டோருக்கு, வரும் ஜூன் 7-ஆம் தேதி முதல் மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

அந்த மாநிலத்தில் பாடகா் சித்து மூஸேவாலா உள்ளிட்ட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை கடந்த மே 28-ஆம் தேதி மாநில அரசு விலக்கிக் கொண்டது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினரை ஈடுபடுத்த இருப்பதால் தற்காலிக அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக மாநில அரசு கூறியிருந்தது. ஆனால், மறுநாள் சித்து மூஸேவாலா மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் குற்றச்சாட்டுகளை மாநில அரசு எதிா்கொண்டது.

இந்நிலையில், முன்னாள் துணை முதல்வா் ஓ.பி.சோனி தனக்கு அளிக்கப்பட்டு வந்த ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு குறைக்கப்பட்டதை எதிா்த்து பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ராஜ் மோகன் சிங் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, கடந்த வாரம் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டவா்களுக்கு வரும் 7-ஆம் தேதி முதல் மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பஞ்சாப் மாநில துணை அட்வகேட் ஜெனரல் கௌரவ் தூரிவால் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com