
புது தில்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முக்கிய ஆலோசனை நடத்தி வரும் நிலையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது.
புது தில்லியின் விக்யான் பவனில் நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவிருக்கிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைவதை முன்னிட்டு, அதற்கு முன்பே, தேர்தலை நடத்தி புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் 10ஆம் தேதி நிறைவு பெற்று, புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில எம்எல்ஏக்கள் வாக்களித்து குடியரசுத் தலைவரை தேர்வு செய்யவிருக்கிறார்கள்.