பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்பை சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பொம்பை செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கடந்த இரண்டு மாதங்களில், இரு பெண்கள் மீது ஆசிட் வீச்சு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கையாளுவதற்கு மேலும் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார்.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
ஆசிட் வீச்சுகளில் ஈடுபடுபவர்களை கையாளுவதற்கு தற்போதுள்ள சட்டங்களை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஆலோசித்து வருகிறோம். வரும் நாள்களில் அவற்றைக் கையாளுவதற்கு கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவோம்.
மேலும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கச் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
சரக்கி நகரில் திருமணத்தை நிராகரித்ததற்காக, மூன்று குழந்தைகளுடன் விவாகரத்து பெற்ற பெண் மீது, ஆசிட் வீச்சு சம்பவம் கடந்த வெள்ளியன்று நிகழ்த்தப்பட்டது.
மேலும், 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய மறுத்ததன் காரணமாக, பெண்ணின் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த பெண் பலத்த காயமடைந்தார்.