ஷிம்லா: உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்று இமாசலப் பிரதேச மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
இமாசலப் பிரதேசம் ஹமிர்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லி அரசு மேற்கொண்ட 1,100 அரசுப் பள்ளித் திட்ட மேம்பாடு மூலம் 16 லட்சம் மாணவ, மாணவிகளின் கல்வி பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை, இமாசலில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 8.5 லட்சம் மாணவர்களுக்கும் பிரகாசமான எதிர்காலம் வேண்டும் என்றால் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.
தில்லி அரசு அதன் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 25 சதவீதத்தை கல்விக்காக செலவிட்டிருப்பதாகவும் கேஜரிவால் கூறினார். மேலும், உங்கள் பிள்ளைகளுக்கு பிரகாசமான எதிர்காலம் வேண்டும் என்றால் ஒரே ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள். நாங்கள் அவ்வளவு ஒன்றும் மோசமானவர்கள் இல்லை என்றும் கேஜரிவால் குறிப்பிட்டார்.