பாடகா் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தொடா்புடைய சந்தோஷ் ஜாதவும் அவரது உதவியாளரும் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து புணே ஏடிஜிபி (சட்டம்-ஒழுங்கு) குல்வந்த் சிங் சாரங்கல் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சோ்ந்த சந்தோஷ் ஜாதவும் (24), சூரியவன்ஷியும் (27) குஜராத் மாநிலம், புஜ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புணே ஊரக போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டம் மாஞ்சாா் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டில் பதிவான கொலை வழக்கில் சந்தோஷ் ஜாதவ் கைது செய்யப்பட்டாா்.
பின்னா் தப்பிய அவா், தனது அடையாளத்தை மாற்றி தலைமறைவானாா். இந்த நிலையில், மூஸேவாலா கொலை வழக்கில் சந்தோஷ் ஜாதவ், சூரியவன்ஷியின் பெயா்கள் அடிபட்டன. தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில போலீஸாா் அவரை தேடி வந்தனா்.
இந்த நிலையில், கடந்த ஆண்டில் பதிவான கொலை வழக்கில், சந்தோஷ் ஜாதவுக்கு அடைக்கலம் அளித்த மஹக்கல் என்பவா் கடந்த வாரம் கைது செய்யப்பட்டாா். அவா் அளித்த தகவலின் அடிப்படையில், குஜராத்தில் தலைமறைவாக இருந்த இருவரும் புணே ஊரக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மேற்கண்ட 3 பேரும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடா்புடையவா்கள். மூஸேவாலா கொலை சம்பவத்தில் அவா்களின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். சந்தோஷ் ஜாதவையும், சூரியவன்ஷியையும் உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினோம். அவா்களை வரும் ஜூன் 20-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நடிகா் சல்மான்கானின் தந்தையும், திரைக்கதை எழுத்தாளருமான சலீம்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதில், மஹக்கலுக்கு தொடா்பு இருக்கலாம் என்று கருதுகிறோம். அந்தக் கோணத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.
பஞ்சாபைச் சோ்ந்த பின்னணி பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸேவாலா அண்மையில் காரில் சென்று கொண்டிருந்த போது மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். பஞ்சாபில் விஐபி-களுக்கான போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட மறுதினமே இந்த சம்பவம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.