‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக பிகாரில் சனிக்கிழமை முழு அடைப்புக்கு மாணவா் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதுதொடா்பாக அந்த மாநிலத்தில் அனைத்து இந்திய இடதுசாரி மாணவா்கள் கூட்டமைப்பு (ஏஐஎஸ்ஏ) தலைமையிலான அமைப்புகள் கூறுகையில், ‘‘அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அந்தத் திட்டத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் சனிக்கிழமை 24 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தன. முழு அடைப்பு அழைப்புக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாநில ஆளுநா் ஃபாகு செளஹானை சனிக்கிழமை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) தலைவா் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளாா்.