ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த இருவேறு துப்பாக்கிச்சூட்டில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி உள்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாரமுல்லாவின் சோபூர் பகுதியில் உள்ள துலிபால் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அங்குப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது, அவர்கள் அதற்கு பதிலடி கொடுத்தனர். இதில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துஜ்ஜானில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த மஜித் நசீர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காஷ்மீர் காவல் கண்காணிப்பாளர் விஜய் குமார் தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த துணை காவலர் ஃபரூக் அகமது மிர் கொலையில் நசீருக்கு தொடர்பு இருப்பதாக அவர் கூறினார்.