கரோனா பாதிப்பால் ஒரு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தான் முழுமையாக குணமடையும் வரை நேஷனல் ஹெரால்டு பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கில் அமலாக்கத் துறை முன்னிலையில் ஆஜராவதில் இருந்து சில வாரங்களுக்கு அவகாசம் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அமலாக்க இயக்குநரகத்துக்கு அவர் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
சோனியா காந்தி கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து ஜூன் 20-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கில் ஜூன் 23-ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறையால் சோனியாவுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஏற்கெனவே ராகுல் காந்தியிடம் 5 நாள்களுக்கும் மேலாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த ஜூன் 8-ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தில் ஆஜராக திட்டமிட்டிருந்த சோனியா காந்திக்கு திடீர் கரோனா தொற்று ஏற்பட்டதால் ஆஜராவதில் இருந்து அவகாசம் கோரியிருந்தார். இதையடுத்து அமலாக்கப் பிரிவு நிறுவனம் புதிதாக சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "கரோனா பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டதால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்க இயக்குநரகத்துக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அவர் பூரண குணமடையும் வரை அமலாக்கப் பிரிவினர் முன் ஆஜராவதை சில வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.