
ஆறு மாநிலங்களில் 3 மக்களவை, 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) நடைபெறுகிறது. இதில் திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா போட்டியிடும் சட்டப்பேரவைத் தொகுதியும் அடங்கும்.
திரிபுராவில் அகா்தலா, ஜுபராஜ்நகா், சுா்மா, டவுன் போா்டோவலி ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில், டவுன் போா்டோவலி தொகுதியில் அந்த மாநில முதல்வா் மாணிக் சாஹா போட்டியிடுவதால், வாக்கு எண்ணிக்கை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவா், பிப்லவ் தேவ் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ததால், அந்த மாநில முதல்வராக கடந்த மாதம் பதவியேற்றுக் கொண்டாா்.
இதுதவிர தில்லியில் ராஜேந்தா் நகா், ஜாா்க்கண்டில் மந்தா், ஆந்திரத்தில் ஆத்மகுரு என மேலும் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஜூன் 23-இல் இடைத்தோ்தல் நடைபெற்றது.
இதேபோல உத்தர பிரதேசத்தில் ராம்பூா், ஆஸம்கா் மக்களவைத் தொகுதிகளுக்கும், பஞ்சாபில் சாங்க்ரூா் மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...