மகாராஷ்டிரத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை (ஜூன் 30) காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
மகாராஷ்டிர ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிப்புக்கெதிராக சிவசேனை கட்சியின் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களும் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கலாம் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் சிவசேனை அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
படிக்க | உத்தவ் தாக்கரே ராஜிநாமா
மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. ஆளும் சிவசேனை கட்சியின் தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையில் 52 சட்டப்பேரவை உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் நாளை (ஜூன் 30) நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க மாநில அரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவிற்கு எதிராக சிவசேனை கட்சியின் தலைமை கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான சிவசேனையின் இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூன் 29) மாலை விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம், நாளை (ஜூன்30) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடையில்லை என உத்தரவிட்டு, இந்த வழக்கை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.