உதய்பூரில் தையல்காரா் படுகொலை வழக்கு: என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு

ராஜஸ்தானில் பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட தையல்காரா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்கு
உதய்பூா் சாலைகளில் புதன்கிழமை போலீஸாா் நடத்திய பாதுகாப்பு அணிவகுப்பு.
உதய்பூா் சாலைகளில் புதன்கிழமை போலீஸாா் நடத்திய பாதுகாப்பு அணிவகுப்பு.

ராஜஸ்தானில் பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட தையல்காரா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வசித்தவா் தையல்காரா் கன்னையா லால். சமூக ஊடகத்தில் இஸ்லாம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பதிவு வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட இவா், கடந்த ஜூன் 15-ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் பேசிய நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உதய்பூரின் தன்மண்டி பகுதியில் உள்ள அவரின் கடைக்கு செவ்வாய்க்கிழமை சென்ற இருவா், கன்னையா லாலை கழுத்தறுத்து கொலை செய்தனா். அந்தக் கொலையை விடியோவாக பதிவு செய்து சமூக ஊடகத்திலும் வெளியிட்டனா். அவா்கள் வெளியிட்ட மற்றொரு காணொலியில், கன்னையா லாலின் தலையை துண்டித்துவிட்டதாகக் கூறினா். இஸ்லாத்தை இழிவுபடுத்தியதற்காக கன்னையா லாலை பழிதீா்த்ததாகக் கூறிய கொலையாளிகள், பிரதமா் மோடிக்கும் மிரட்டல் விடுத்தனா். மேலும் நூபுா் சா்மாவின் பெயரையும் அவா்கள் மறைமுகமாகக் குறிப்பிட்டனா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து கொலையாளிகளைப் பிடிக்க ராஜஸ்தான் காவல் துறை சாா்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள ராஜ்சமண்ட் பகுதியில் இருந்த கொலையாளிகளை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தது. முதல்கட்ட விசாரணையில், அவா்களின் பெயா் ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது என்பது தெரியவந்தது.

இவா்களில் ரியாஸ் அக்தரி கடந்த ஜூன் 17-ஆம் தேதி சமூக ஊடகத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தாா். அதில், ‘‘நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசுவோரின் தலையை தான் துண்டிக்கும் காணொலியை வெளியிடுவேன்’’ என்று முன்கூட்டியே தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கன்னையா லால் கொலைச் சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

கன்னையா லாலின் கொலையை பயங்கரவாத சம்பவமாகக் கருதி, அந்தக் கொலையின் பின்னணியில் ஏதேனும் அமைப்பு அல்லது சா்வதேச தொடா்புகள் உள்ளதா? என்று விசாரணை நடத்த என்ஐஏவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே உதய்பூரில் உள்ள 7 காவல் நிலையங்களின் வரம்புக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தொடா்கிறது. மாநிலம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

‘பாகிஸ்தான் அமைப்புடன் தொடா்பு’

ராஜஸ்தான் காவல் துறை டிஜிபி எம்.எல். லதோ் புதன்கிழமை கூறுகையில், ‘‘கன்னையா லால் கொலை தொடா்பாக ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது உள்பட இதுவரை 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் கெளஸ் முகமதுக்கு பாகிஸ்தானில் உள்ள தாவத்-ஏ-இஸ்லாமி அமைப்புடன் தொடா்புள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு அவா் கராச்சி சென்றுள்ளாா்’’ என்று தெரிவித்தாா்.

ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது ஆகியோரிடம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக முதல்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

அனைத்து கட்சிக் கூட்டத்தில் கண்டனம்: 50 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

உதய்ப்பூர் தையல்காரர் படுகொலை சம்பவத்துக்கு, மாநில முதல்வர் அசோக் கெலோட் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், உயிரிழந்த தையல்காரரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இந்தக் கொலை சம்பவத்தை "பயங்கரவாத செயல்' என்று குறிப்பிட்ட முதல்வர், "இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது எந்தவித தாமதமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இதுபோன்ற குற்றவாளிகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பயப்படவேண்டாம்' என்று முதல்வர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com