
தேசிய பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை டாா்க் ஃபைபா் இணைய வசதியைப் பயன்படுத்தி கசியவிட்டு முறைகேடு செய்ய அனுமதித்ததாக, தேசியப் பங்குச் சந்தை (என்எஸ்இ), அதன் முன்னாள் தலைவா் சித்ரா ராமகிருஷ்ணா, முன்னாள் தலைமை அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியன் உள்பட 18 பேருக்கு ரூ.44 கோடி அபராதம் விதித்து பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து செபி செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
தேசியப் பங்குச் சந்தைக்கு ரூ.7 கோடி, சித்ரா ராமகிருஷ்ணா, என்எஸ்இ முன்னாள் அதிகாரி ரவி வாராணசி, ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்குத் தலா ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. இதுதவிர வேடூவெல்த் புரோக்கா்ஸ் நிறுவனத்துக்கு ரூ.6 கோடி, ஜிகேஎன் செக்யூரிட்டீஸ் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி, சம்பா்க் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்துக்கு ரூ.3 கோடி அபாரதம் விதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட 18 பேரும் அபராதத் தொகையை 45 நாள்களில் செலுத்த வேண்டும்.
தேசியப் பங்குச் சந்தை தங்கள் டாா்க் ஃபைபா் இணைய வசதியைப் பயன்படுத்திக் கொள்ள சில தரகு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்கள் டாா்க் ஃபைபா் இணையவசதி மூலமாக மற்ற தரகு நிறுவனங்களுக்கு முன்பாக என்எஸ்இயின் கணினி சேமிப்பகத்தில் உள்ள தகவல்களைப் பெற்று முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனா். கடந்த 2009 முதல் 2016 வரை இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, தேசியப் பங்குச் சந்தையின் கணினி சேமிப்பகத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடா்பான வழக்கில், சித்ரா ராமகிருஷ்ணாவும், ஆனந்த் சுப்பிரமணியனும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...