புது தில்லி: சர்வதேச மகளிர் நாள் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மகளிர் நாளை முன்னட்டு, ஃபிளிப்கார்ட், அதன் ஸ்டைலில் அளித்த வாழ்த்துக்கு மன்னிப்புக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மின்னணு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஃபிளிப்கார்ட், அண்மையில் மகளிர் நாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டிருந்தது. அதனுடன் சமையலறை பொருள்கள் விலைக் குறைவாக கிடைக்கும் என்ற விளம்பரத்தையும் இணைத்திருந்தது.
அந்த வாழ்த்துச் செய்தியில், அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, இந்த மகளிர் நாளை கொண்டாடலாம், சமையலறை சாமான்களை ரூ.299 முதல் வாங்கலாம் என்று தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த விளம்பரமும் வாழ்த்தும், அதன் வாடிக்கையாளர்களை சென்றடைந்ததோ இல்லையோ, ஏராளமானவர்களின் விமரிசனங்களை வாங்கிக் கட்டிக்கொண்டது. பெண்கள் எல்லாம் சமையலறைக்கு உரியவர்கள் என்பது போல, தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்ட ஃபிளிப்கார்ட்டுக்கு கடுமையான விமரிசனங்கள் வந்தது.
சமையலறை என்பது வெறும் பெண்கள் மட்டும் இருக்கும் இடம் என்று நினைக்கிறாயா என்பது முதல் ஏராளமானோர் காட்டமான கருத்துகளை தெரிவித்திருந்ததால், தனது வாழ்த்து செய்தியை திரும்பப் பெற்றுக் கொண்டதோடு, அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டது. நாங்கள் யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தோடு, இதைச் செய்யவில்ல. முன்னதாக வெளியிட்டிருந்த மகளிர் நாள் வாழ்த்துச் செய்திகளுக்காக மன்னிப்புக் கோருகிறோம் என்று கூறி சுட்டுரையில் பதிவிட்டுள்ளது.