உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்கு சமாஜவாதி கட்சியும் ஊடகங்களும்தான் காரணம் என மாயாவதி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்கு சமாஜவாதி கட்சியும் ஊடகங்களும்தான் காரணம். பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவின் 'பி' டீம் என்று பிரசாரம் மேற்கொண்டன.
உத்தரப்பிரதேசத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. நாங்கள் மாநிலம் முழுவதும் கருத்துக்களை சேகரித்துள்ளோம்.
சாதிவெறி ஊடகங்கள், சூழ்ச்சிகள், முஸ்லிம்கள் மற்றும் பாஜக எதிர்ப்பு இந்துக்களை தவறாக வழிநடத்தும் பிரசாரங்கள் இங்கு பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவின் பி-டீம் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டதே கட்சியின் தோல்விக்குக் காரணம். உண்மையில் பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் மேற்குறிப்பிட்டவற்றுக்கு எதிராக தீவிரமாகப் போராடவில்லை. உண்மை என்பது முற்றிலும் நேர்மாறானது என்று குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 202 இடங்கள் தேவை என்ற நிலையில், 273 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சமாஜவாதி கூட்டணி 121 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி நிலையைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத் தவுகளின்படி உத்தரப் பிரதேசத்தில் பாஜக 41.3 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. சமாஜவாதி 32.1 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 2.33 சதவிகித வாக்குகளையும், ராஷ்டீரிய லோக் தளம் 2.9 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளது.