பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் விமான நிலையத்தில் இருந்து பாஜக அலுவலகம் வரை சாலைப் பேரணியில் ஈடுபட்டார்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத் வந்துள்ளார். குஜராத் விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து பாஜக அலுவலகம் வரை சாலைப் பேரணியில் ஈடுபட்டார். செல்லும் வழியில் பாஜக தொண்டர்கள் காத்திருந்து பிரதமரை வரவேற்றனர்.
குஜராத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த சாலைப் பேரணி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடி, இன்று மாலை 4 மணியளவில், குஜராத் பஞ்சாயத்து மகாசம்மேளனில் பங்கேற்று உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை 11 மணிக்கு பிரதமர் ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தின் (RRU) கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அங்கு தனது முதல் உரையையும் நிகழ்த்துகிறார். மாலை 6:30 மணியளவில், 11வது கேல் மஹாகும்பத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 பேரவைத் தொகுதிகளில் 255 இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. உத்தரகண்டில் மொத்தமுள்ள 70 இடங்களில் 47 இடங்களை அக்கட்சி கைப்பற்றியது.
கோவாவில் 40 இடங்களில் பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்று சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவையும் மணிப்பூரில் ஆளும் பாஜக கூட்டணி 60 இடங்களில் 31 இடங்களையும் கைப்பற்றியது.