பஞ்சாபில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் ஆட்சி அமைக்கவிருக்கும் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்க இருப்பதாக சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் 117ல் 92 இடங்களைக் கைப்பற்றி மாநிலத்தில் முதல்முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி. அடுத்தபடியாக காங்கிரஸ் 18 தொகுதிகளில் வென்றுள்ளது.
சிரோமணி அகாலி தளம் 3 இடங்களில் வென்றுள்ளது. எனினும், கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ஜலாலாபாத் தொகுதியில், ஆம் ஆத்மி வேட்பாளர் ஜெக்தீப் கம்போஜிடம் தோல்வியுற்றார்.
அதுபோன்று பஞ்சாப் மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவரும் சிரோமணி அகாலி தளத் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலும், தான் போட்டியிட்ட லம்பி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். தலைவர்கள் இருவரும் தோல்வியுற்றது கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தோல்வி குறித்து சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், 'பஞ்சாபில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். தோல்வி குறித்து விவாதிக்க ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளோம். பஞ்சாபில் ஆட்சி அமைக்கவிருக்கும் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று, 'பஞ்சாபியர்கள் வழங்கிய தீர்ப்பை நாங்கள் முழு மனதுடன் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்த லட்சக்கணக்கான பஞ்சாபிகளுக்கும், தன்னலமற்ற உழைக்கும் ஊழியர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பணிவோடு அவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம்' என்று குறிப்பிட்டிருந்தார்.