இந்திய ஜனநாயகத்திற்குள் சமூக ஊடகங்கள் ஊடுருவும் அபாயம் அதிகரித்துள்ளதாக மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை பேசினார்.
இன்று மக்களவையில் சோனியா காந்தி பேசியதாவது:
நமது ஜனநாயகத்திற்குள் சமூக ஊடகங்கள் ஊடுருவும் அபாயம் அதிகரித்து வருகிறது. உலகளாவிய நிறுவனங்களான முகநூல், டிவிட்டர் உள்ளிட்டவை அரசியல் தலைவர்கள், கட்சிகளை வடிவமைக்க அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
உலகளாவிய நிறுவனங்கள் அனைத்துக் கட்சியினருக்கும் சமமான இடத்தை வழங்குவதில்லை என்பது பலமுறை மக்கள் கவனத்திற்கு வந்துள்ளது. கடந்தாண்டு சர்வதேச இதழில் வெளியான செய்தியில், முகநூல் தனது விதிமுறையை ஆளும் கட்சிக்காக மீறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் விதிமுறைகளை மீறி, அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுப்பதற்காக தனது சொந்த விதிமுறைகளையே முகநூல் மீறியுள்ளது.
ஆளும் கட்சியின் துணையுடன் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அப்பட்டமான செயலில் முகநூல் ஈடுபட்டுள்ளது நமது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது.
போலி விளம்பரங்களால் இளம் மற்றும் முதியவர்களிடம் வெறுப்பூட்டும் கருத்துகளை முகநூல் கொண்டு செல்கிறது. இதனால், அந்நிறுவனம் லாபம் ஈட்டுகின்றன.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் நடைமுறைகளில் முகநூல் மற்றும் பிற சமூக ஊடகங்கள் செயல்பட்டுள்ளன. நமது ஜனநாயகத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.