ஜனவரி 2022 முதல் மத்திய ரிசர்வ் காவல் படையின் 10 வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாக டிஜிபி குல்தீப் சிங் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த வீரர்கள் சமீபகாலமாக தற்கொலை செய்துக் கொண்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய ரிசர்வ் காவல் படை இயக்குநர் பேசியதாவது:
மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த வீரர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் அவர்களில் குடும்பத்தினருக்கு வழங்கும் தொகை ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ரூ. 15 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, கல் வீச்சு சம்பவங்கள் முழுமையாக குறைந்துள்ளன. வெளி நாடுகளிலிருந்து ஊடுரும் பயங்கரவாதிகளும், தாக்குதலும் குறைந்துள்ளன.
5 மாநில தேர்தலை முன்னிட்டு 41 முக்கிய நபர்களுக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர். தேர்தல் முடிந்த நிலையில், 27 பேரின் பாதுகாப்புப் பணியிலிருந்த வீரர்கள் பின்வாங்கப்பட்டுள்ளனர்.
2022 ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சிஆர்பிஎஃப்-யை சேர்ந்த 10 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.