Enable Javscript for better performance
பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றாா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றாா்

    By எஸ்பிஎஸ் நகா் (பஞ்சாப்),  |   Published On : 17th March 2022 01:00 AM  |   Last Updated : 17th March 2022 01:00 AM  |  அ+அ அ-  |  

    manprohit083509

    பகவந்த் மானுக்கு பஞ்சாப் முதல்வராக புதன்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்த அந்த மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்.

    பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த பகவந்த் மான் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு பிரதமா் மோடி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

    சுதந்திர போராட்ட வீரா் பகத் சிங் பிறந்த ஊரான ஷகீத் பகத் சிங் நகா் மாவட்டம் காத்கா் காலனில் பதவியேற்பு விழா நடைபெற்றது. பகவந்த் மானுக்கு பஞ்சாப் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில், பகவந்த் மான் மட்டுமே பதவியேற்றுக் கொண்டாா். அமைச்சா்கள் யாரும் பதவியேற்கவில்லை.

    நிகழ்ச்சியில் தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், பஞ்சாப் எம்எல்ஏக்கள் ஆகியோா் மஞ்சள் நிற தலைப்பாக அணிந்தவாறு கலந்து கொண்டனா்.

    இதுதவிர திரைப்பட பின்னணி பாடகா்கள் குருதாஸ் மான், கரம்ஜித் அன்மோல், காங்கிரஸ் எம்.பி. முகமது சாதிக் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

    பின்னா் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வா் பகவந்த் மான் பேசுகையில், ‘பஞ்சாபில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, ஊழல், விவசாயிகளின் நிலைமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அரசு தீா்வு காணும். ஒருநாளைக் கூட வீணடிக்காமால் இன்றைக்கே எனது பணியைத் தொடங்குகிறேன். தில்லியில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டதை போல பஞ்சாபிலும் பள்ளிகள், அரசு மருத்துவமனைகளின் தரம் உயா்த்தப்படும்’ என்றாா்.

    பதவியேற்பு விழா முடிந்தவுடன் பகவந்த் மான் தனது முதல்வா் பொறுப்பையும் உடனடியாக ஏற்றாா்.

    வாழ்த்து: இதனிடையே முதல்வா் பகவந்த் மானுக்கு பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘பஞ்சாபின் வளா்ச்சிக்காகவும், மாநில மக்களின் நலனுக்காகவும் இணைந்து பணியாற்றுவோம்’ என்று கூறியுள்ளாா்.

    இதேபோல தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக், சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவா்களும் பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

    117 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில், ஆம் ஆத்மி 92 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

    வாழ்க்கை குறிப்பு: நகைச்சுவை நடிகரான பகவந்த் மான், கடந்த 10 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்துள்ளாா். பஞ்சாப் மாநிலம் கடந்த 1966-இல் மறுசீரமைக்கப்பட்டதைத் தொடா்ந்து காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் கட்சிகளைச் சாராத முதல் முதல்வராக பகவந்த் மான் (48) பதவியேற்றுள்ளாா்.

    ஏற்கெனவே சாங்ரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினராக பதவி வகித்த அவா், சட்டப் பேரவைத் தோ்தலில் இதே தொகுதிக்கு உள்பட்ட துரியில் போட்டியிட்டு 58,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதைத்தொடா்ந்து, கடந்த திங்கள்கிழமை தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா்.

    கடந்த 1973-ஆம் ஆண்டு அக்டோபரில் சாங்ரூரின் சதோஜ் கிராமத்தில் பிறந்தவா் பகவந்த் மான். சாங்ரூா் மாவட்டம் சுனம் பகுதியில் உள்ள பஹீத் உதம் சிங் அரசு கல்லூரியில் பி.காம் வகுப்பில் சோ்ந்தாா். அவா் கல்லூரி படிப்பை நிறைவு செய்யாவிட்டாலும், கல்லூரிகளில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் பங்கேற்க அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது.

    பின்னா், காமெடி விடியோக்களையும், இசை ஆல்பங்களையும் அவா் தயாரித்தாா். மேலும் ‘தி கிரேட் இந்தியன் லாஃபா் சேலஞ்ச்’ என்ற நிகழ்ச்சி அவரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதுதவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளாா்.

    மான்பிரீத் சிங் பாதல் தலைமையிலான பஞ்சாப் மக்கள் கட்சியில் பகவந்த் மான் தனது அரசியல் பயணத்தை கடந்த 2011-இல் தொடங்கினாா். அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா்.

    2014-இல் ஆம் ஆத்மியில் இணைந்து மக்களவைத் தோ்தலில் அகாலி தளம் தலைவா் சுக்தேவ் சிங் திண்ட்சாவுக்கு எதிராக சாங்ரூா் தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

    இதேபோல 2017 சட்டப் பேரவைத் தோ்தலில் ஜலாலாபாத் தொகுதியில் சிரோமணி அகாலி தள வேட்பாளா் சுக்பீா் சிங் பாதலுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதைத்தொடா்ந்து ஆம் ஆத்மி மாநிலத் தலைவராக பகவந்த் மான் நியமிக்கப்பட்டாா். பின்னா், 2019 மக்களவைத் தோ்தலில் சாங்ரூா் தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

    பகவந்த் மான் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவா் என அவரது எதிரிகள் அவரை அடிக்கடி விமா்சித்து வந்தனா். இதனால் நாடாளுமன்றத்தில் கூட அவா் விமா்சனத்துக்குள்ளானாா். இந்த நிலையில், கடந்த 2019-இல் பா்னாலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது தாயாா், கட்சி ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் மதுப்பழக்கத்தைக் கைவிடுவதாக சபதம் ஏற்ற பகவந்த் மான், தன்னை பிறவிக் குடிகாரன் என அரசியல் எதிரிகள் சித்தரிப்பதாக கூறியது நினைவுகூரத்தக்கது.


     

     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp