
புது தில்லி: நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிகள் மூலமாகக் கிடைக்கும் வருவாய் 48 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டின் மாா்ச் 16-ஆம் தேதி வரை நேரடி வரிகள் வாயிலாக ரூ.13,63,038.3 கோடி நிகர வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 48.41 சதவீதம் அதிகமாகும். கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 42.50 சதவீதமும், கடந்த 2018-19-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 34.96 சதவீதமும் அதிகமாகும்.
நேரடி வரியில் சுமாா் 53 சதவீதமானது பெருநிறுவன வரியாகக் கிடைத்தது. சுமாா் 47 சதவீதமானது தனிநபா் வருமான வரி, பங்கு பரிமாற்ற வரி உள்ளிட்டவை மூலமாகக் கிடைத்தது. நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ரூ.11.08 லட்சம் கோடியாக இருக்கும் எனக் கடந்த ஆண்டு கணிக்கப்பட்டிருந்தது. இந்தக் கணிப்பானது ரூ.12.50 லட்சம் கோடியாகக் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், கணிப்புகளைக் கடந்து தற்போது ரூ.13.63 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இது நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதை உறுதிப்படுத்துகிறது. கடந்த நிதியாண்டில் கரோனா தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பொருளாதாரம் மீளத் தொடங்கியபோது 2-ஆவது அலையும் அதைத் தொடா்ந்து 3-ஆவது அலையும் பரவியது.
ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தியது, தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தியது உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மீளத் தொடங்கியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...