பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குருதேவ் சிங் தேவ் மான் எம்எல்ஏ-வாக பதவியேற்க 80 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்து பதவியேற்றுக் கொண்டார்.
பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அவருடைய மாளிகையில் கடந்த சனிக்கிழமை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார் பகவந்த் மான்.
இதையும் படிக்க.. லஞ்ச ஒழிப்பு உதவி எண்: பஞ்சாப் முதல்வர் அதிரடி
பதவியேற்பு விழாவானது பகத் சிங்கின் கிராமமான கட்கட் களானில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அவருடன் 16 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்விற்காக 100 ஏக்கர் பரப்பளவில் விழா அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
பதவியேற்பு விழாவில், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர்.
இதில், நாபா தொகுதியில் வெற்றிபெற்ற குருதேவ் சிங் தேவ் மான் என்பவர் எம்எல்ஏவாக பதவியேற்க தன் சொந்த ஊரிலிருந்து தலைநகர் சண்டிகர் வரை 80கிலோமீட்டர் சைக்கிளில் சென்று பதவியேற்றுக் கொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர், ’மக்களின் பிரச்னைகளை அறிய, அவர்களைத் தேடிச் செல்ல சைக்கிளே சிறந்த வாகனம். இனி வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கும் சைக்கிளிலேயே செல்லவுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.