பஞ்சாபில் தற்காலிக அரசுப் பணியாளர்களாக இருக்கும் 35 ஆயிரம் பேரை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரியளவிலான வெற்றியை பதிவு செய்த ஆம் ஆத்மி ஆட்சி அமைத்துள்ளது. மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், இன்று பகவந்த் மான் வெளியிட்ட அறிவிப்பில்,
“பஞ்சாப் மாநிலத்தில் குரூப் சி மற்றும் குரூப் டி பிரிவுகளில் பணிபுரிந்து வரும் 35,000 தற்காலிக பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இனி வரும் காலங்களில் தற்காலிக ஒப்பந்த முறையிலும், வெளி நிறுவனங்கள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்யும் முறைகளை முடிவுக்கு கொண்டுவருமாறு தலைமைச் செயலாளரிடம் அறிவுறுத்தியுள்ளேன்” என்றார்.