கேரளத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியாக வாடகை வாகனங்களில் பயணக் கட்டணம் உயரும் என்று கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி ராஜு தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து ஆட்டோ, டாக்சிகளுக்கான வாடகை கட்டண உயர்வு குறித்து பரிசீலனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ராமச்சந்திரன் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.
இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டு கேரள அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.25-லிருந்து ரூ.30 ஆக உயர்த்தலாம் என்று அறிவித்துள்ளது.
கால் டாக்சிகளுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.175-லிருந்து ரூ.210ஆக உயர்த்தலாம் என்று தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில் 50 சதவிகிதம் கூடுதலாக வசூலிக்கலாம் என்றும், 15 நிமிட காத்திருப்புக்கு ரூ.10 கட்டணமாக பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் டாக்ஸிக்களில் கிலோமீட்டருக்கு ரூ. 17 முதல் 20 என கட்டணம் நிர்ணயிக்கப்படவுள்ளது. ஆட்டோக்களில் கிலோமீட்டருக்கு ரூ. 12 முதல் 15 ரூபாய் நிர்ணயிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசிய கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோனி ராஜு, கட்டண உயர்வு குறித்து ஆலோசனை செய்த பிறகு விரைவில் முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.