பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களவை எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காலை உணவு சாப்பிட்டதுடன் அரசியல் ரீதியாக ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது பிரதமர் நரேந்திர மோடி, உணவு இடைவேளையில் பாஜக ஆளும் மாநில எம்.பி.க்களை சந்தித்துப் பேசி வருகிறார்.
அந்தவகையில் இன்று காலை உணவு நேரத்தில், பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, பிகார் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், ஆர்.கே.சிங், மத்திய இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, நிஷிகாந்த் துபே உள்ளிட்ட 24க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிகார் எம்பி பிரதீப் சிங், நான்கு மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் வெற்றி குறித்து பிரதமர் மோடி பேசியதாகத் தெரிவித்தார்.
மேலும் அவர், 'ஒரு குடும்பத்தின் பாதுகாவலரைப் போல பிரதமர் எங்களை சந்திக்கிறார். தனது எம்.பி.க்களை அடிக்கடி சந்திக்கும் முதல் பிரதமர் அவர்தான். மாநிலத்தில் உள்ள மாற்றங்கள் குறித்தும் கேட்டறிந்தார்' என்றார்.