இந்தியர்களுக்கு ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஆவணமாகும். 12 இலக்க எண்களைக் கொண்ட ஆதார் அட்டையில், ஒரு தனி நபரின் பல விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அனைத்துமே மிகச் சரியாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஒரு நபரின் பெயர், வயது, முகவரி, புகைப்படம், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட பல விவரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும். இதில் எந்த விவரங்கள் தவறாக இருந்தாலும் அதனை அரசு இ - சேவை மையங்களுக்கு நேரில் சென்றோ அல்லது உரிய ஆவணங்களை இணைத்து இணையதளம் மூலமாகவோ திருத்திக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு நடைமுறைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்பதால், அதில் இருக்கும் விவரங்கள் சரியாக இருக்க வேண்டியதும் அவசியம். மற்ற விவரங்கள் சரியாக இல்லையென்றாலும் கூட, ஒரு நபர் தனது ஆதார் அட்டையில் இருக்கும் செல்லிடப்பேசி எண்ணை சரியாக இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று ஆதார் அமைப்பு வலியுறுத்துகிறது.
இது குறித்து ஆதார் அமைப்பு தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவலில், எப்போதும் ஆதார் அட்டையில் சரியான செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்து வைத்திருங்கள். அவ்வாறு ஆதார் அட்டையில் இருக்கும் செல்லிடப்பேசி எண் சரியானதா என்ற சந்தேகம் இருந்தால் அதனை சரிபார்க்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது என்று இணைய முகவரி இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இணையமுகவரியில் உங்கள் ஆதார் எண் மற்றும் செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்தால், ஓடிபி வரும். அவ்வாறு வரவில்லை என்றால், செல்லிடப்பேசி தவறாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அதோடு உங்கள் மின்னஞ்சலையும் சரிபார்க்கவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.