
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
புதுதில்லி: நாட்டை எப்படி சீரழிக்கலாம் என்பதை மோடியின் 8 ஆண்டு கால ஆட்சி பாடமாக்கியுள்ளது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், கரோனா சூழல், ஆக்சிஜன் பற்றாக்குறை, எரிபொருள்கள் விலையேற்றம், நிலக்கரி பற்றாக்குறை, போன்றவற்றை முன்வைத்து, பிரதமா் நரேந்திர மோடி அரசை ராகுல் காந்தி அவ்வப்போது விமா்சித்து வருகிறாா்.
நாட்டில் வெப்பஅலை அதிகரித்துள்ளதன் காரணமாக மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. அதே வேளையில், நிலக்கரித் தட்டுப்பாடு, அனல்மின் நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின்சார உற்பத்தி குறைந்தது. அதன் காரணமாக பல மாநிலங்கள் மின்வெட்டு பிரச்னையைச் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், ராகுல் காந்தி சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் போராட்டம், பணவீக்கம் அதிகரிப்பு, மின்சாரம் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதுதான் நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டுகால தவறான நிர்வாகம், ஒரு காலத்தில் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்டிருந்த நாட்டை எவ்வாறு சீரழிக்கலாம் என்பதையே பாடமாக்கியுள்ளது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.