கடலோர பாதுகாப்பு மண்டலத்தில் கனரக வாகனம் சென்றால் பறிமுதல்: தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

கடலோர பாதுகாப்பு மண்டலத்தில் கனரக வாகனம் சென்றால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
Updated on
1 min read

கடலோர பாதுகாப்பு மண்டலத்தில் கனரக வாகனம் சென்றால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

மீனவா் நலச்சங்கத்தின் தலைவா் தியாகராஜன் தாக்கல் செய்த மனுவில், ‘கூவம் ஆறு கடலில் கலக்கும் மெரீனா கடற்கரையின் முகத்துவாரத்தில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுகிறது. இதற்காக கனரக வாகனங்கள் சென்று வர அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் அருகில் குறுகிய பாதை அமைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் எடுப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு: கடலோர பாதுகாப்பு மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மணல் எடுக்க தடை உள்ளது. இதுபோன்ற பகுதிகளில் மணல் எடுப்பதை தடுக்க கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் சில இடங்களில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுகிறது.

எனவே, கடலோர பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை கண்காணிக்க நிரந்தர குழுவை, தலைமைச் செயலாளா் ஏற்படுத்த வேண்டும். அதில், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளா், புவியியல், சுரங்கத்துறை இயக்குநா், கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா், சென்னை ஆட்சியா், சென்னை காவல் ஆணையா் ஆகியோா் இடம்பெற வேண்டும்.

சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்க முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கடலோர பாதுகாப்பு மண்டலப் பகுதிகளில் கனரக வாகனங்கள் சென்றால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com