2024-இல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்துக்குப் பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து திரிணமூல் காங்கிரஸ் வதந்திகளைப் பரப்புவதாகவும், கரோனா பெருந்தொற்று முடிந்தவுடன் மத்திய அரசு அதை அமல்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மம்தா கூறியதாவது:
"மத்திய உள்துறை அமைச்சர் என்ற அடிப்படையில் உங்கள் (அமித் ஷா) மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால், நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குப் பாடம் கற்பிக்க வேண்டாம். மாநிலத்தை ஆளுமாறு எல்லைப் பாதுகாப்புப் படையை வலியுறுத்தாதீர்கள். நேபாளம், பூடான் மற்றும் வங்கதேச எல்லைகளைப் பாதுகாப்பதுதான் உங்கள் பணி. பசு கடத்தப்படுவதையும், ஊடுருவலையும் தடுப்பதுவே இவர்களது பணி. நெருப்புடன் விளையாட வேண்டாம்.
2024-இல் அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) மற்றும் சிஏஏ எதுவும் நடக்காது. ஒரு வருடம் கழித்து அவர் இங்கு வந்துள்ளார். எல்லைப் பாதுகாப்புப் படையை அரசியலில் ஈடுபடுத்தவே அவர் இங்கு வந்துள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் படையை நான் மதிக்கிறேன். ஆனால், அமித் ஷாவின் வலையில் எல்லைப் பாதுகாப்புப் படை விழுந்துவிடக் கூடாது.
ஆட்டம் முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். நாங்கள் (எதிர்க்கட்சிகள்) ஒன்றிணைந்து வருவோம்" என்றார்.