தேசத் துரோக வழக்கில் கைதானவர்கள் பிணை கோரலாம் உச்ச நீதிமன்றம்

தேசத் துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீனை செய்யும் வரை அந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதியக் கூடாது என்று உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசத் துரோக வழக்கில் கைதானவர்கள் பிணை கோரலாம் உச்ச நீதிமன்றம்
தேசத் துரோக வழக்கில் கைதானவர்கள் பிணை கோரலாம் உச்ச நீதிமன்றம்

புது தில்லி: தேசத் துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீனை செய்யும் வரை அந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதியக் கூடாது என்று உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் பிணை கோரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மறுபரிசீலனை செய்யும்வரை தேசத் துரோக வழக்குகளைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது என்று கருதுகிறோம். மத்திய, மாநில அரசுகள் தேசத் துரோக சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யாது என்று நம்புகிறோம் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 

தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்படும் 124 (ஏ) சட்டப்பிரிவு விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கும்வரை, அந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தேசத் துரோக வழக்குப்  பதிவு செய்யப்படும் 124(ஏ) சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, தேச விரோத செயல் என அடையாளம் காணக்கூடிய நடவடிக்கைக்கு எதிராக தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்திருந்தது.

இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் என்று கண்டறியப்பட்ட பிறகும் தேசத் துரோக வழக்குப் பதியாமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் மத்திய அரசு குறிப்பிட்டிருந்தது.

தற்காலிகமாக தேசத் துரோக வழக்குப் பதிவு செய்வதை நிறுத்திவைக்க முடியுமா என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு தரப்பில் இன்று பதிலளிக்கப்பட்டது.

மத்திய அரசு அளித்த விளக்கத்தில், மாநில காவல்துறையினரை தேச துரோக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்குமாறு உத்தரவிட முடியாது.  வரும் காலத்தில் ஒருவர் தேசத் துரோக செயலில் ஈடுபட்டால் அது எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.  அப்படியிருக்கும்போது 124ஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று எப்படி சொல்ல முடியும்.

இதைத் தவிர்த்து எந்த உத்தரவு வழங்கினாலும் அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேசத் துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்ததையடுத்து, அதுவரையில் மக்களை பாதுகாக்க புதிதாக தேசத் துரோக வழக்குகள் பதியப்படுவதை நிறுத்தி வைக்கலாமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்ததற்கு மத்திய அரசு இந்த விளக்கத்தை அளித்திருந்தது.

மத்திய அரசின் விளக்கத்தை நிராகரித்திருக்கும் உச்ச நீதிமன்றம், தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, தேசத் துரோக சட்டம் செல்லுபடியாகும் என கேதா்நாத் சிங் வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு 1962-ஆம் ஆண்டு தீா்ப்பு அளித்தது. இந்தத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இது தொடா்பாக மத்திய அரசிடம் அறிவுறுத்தல் கேட்ட பின்பு புதன்கிழமை தெரிவிக்கப்படும்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘தேசத் துரோக வழக்குப் பிரிவு தவறாக கையாளப்படுவதாக மத்திய அரசே கவலை தெரிவித்துள்ளதால், இதில் நடுநிலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இந்த வழக்குப் பதிவுக்கு எதிராக வருபவா்களை கீழ் நீதிமன்றங்களை அணுகுங்கள், மாதக் கணக்கில் சிறையில் இருங்கள் என நாங்கள் தொடா்ந்து கூற முடியாது. மத்திய அரசிடமிருந்து இதற்கான தெளிவான விளக்கத்தை எதிா்பாா்க்கிறோம்.

முந்தைய நிலுவை தேசத் துரோக வழக்குகள் குறித்தும் மக்களைப் பாதுகாக்க இனி புதிதாக பதிவு செய்யப்படும் தேசத் துரோக வழக்குகளில் அரசின் நிலைப்பாடு குறித்தும் பதிலளிக்க வேண்டும். இந்தச் சட்டம் குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்யப்படும் வரையில் புதிய வழக்குகள் பதிவை நிறுத்தி வைக்கலாமா?

தேசத் துரோக சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் வரையில், மாநில அரசுகள் 124ஏ பிரிவை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு தனது அமைச்சகத்தின் மூலம் ஏன் உத்தரவிடக் கூடாது?

தேசத் துரோக சட்டப் பிரிவுக்கு அதிகாரம் குறைக்கப்பட்டிருந்தாலும், உள்ளூா் காவலர்கள் களத்தில் அந்தப் பிரிவை தீவிரமாக பயன்படுத்தி வருகிறாா்கள். மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்காமல் தேசத் துரோக வழக்குப் பதிவை நிறுத்த முடியாது’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலா் மிருத்யுஞ்சயகுமாா் நாராயண் திங்கள்கிழமை தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், ‘ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின் காலாவதியான 1,500-க்கும் மேற்பட்ட சட்டங்கள் பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின் பேரில் ரத்து செய்யப்பட்டன. ஆங்கிலேயா்களின் காலனித்துவ சட்டங்களையும் நடைமுறைகளையும் ஒழிக்க வேண்டும் என்றும் பிரதமா் கேட்டுக்கொண்டுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com