வைட்ஹேட் ஜூனியர் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அறிவித்த நிலையில், 800 ஊழியர்கள் தங்கள் பணியை ராஜிநாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட வைட்ஹேட் ஜூனியர் நிறுவனம்
இணையம் மூலம் பாடங்களை கற்பித்து வருகிறது. கணிதம் அறிவியல் பாடங்கள் அதிக அளவாக இந்த நிறுவனத்தின் மூலம் இணையவாயிலாக கற்பிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தை இணைய வழி பாடங்களைக் கற்பிக்கும் பைஜூஸ் நிறுவனம் தற்போது வாங்கியுள்ளது.
கரோனா பொதுமுடக்கத்தால் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே பணி செய்து வந்துள்ளனர். தற்போது கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணி புரிய வேண்டும் என்று வைட்ஹேட் ஜூனியர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி முதல் அலுவலகத்தில் இருந்து பணி புரிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது வரை 800 ஊழியர்கள் தங்கள் பணியை ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ராஜிநாமா கடிதங்கள் பெரும்பாலும் முழு நேர ஊழியர்களிடமிருந்து வந்துள்ளன. அதிகமாக விளம்பரம், கணிதம், கணிப்பொறியியல் கோடிங் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் தங்கள் பணியை ராஜிநாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்த நாள்களில் ராஜிநாமா செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வீட்டில் குழந்தைகள், உடல்நிலை சரியில்லாத முதியவர்கள் இருப்பதால் அலுவலகம் சென்று பணி புரிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.