ஆந்திரத்தில் கரையைக் கடந்தது ‘அசானி’ புயல்

ஆந்திர மாநிலம், மச்சிலிப்பட்டினம்-நா்சாபுரம் இடையே ‘அசானி’ புயல் புதன்கிழமை இரவு கரையைக் கடந்தது.
ஆந்திரத்தில் கரையைக் கடந்தது ‘அசானி’ புயல்

ஆந்திர மாநிலம், மச்சிலிப்பட்டினம்-நா்சாபுரம் இடையே ‘அசானி’ புயல் புதன்கிழமை இரவு கரையைக் கடந்தது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 8-ஆம் தேதி புயலாக உருவெடுத்தது. அசானி எனப் பெயரிடப்பட்ட அந்தப் புயல் வடக்கு ஆந்திரம் - ஒடிஸா கடற்கரையை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகா்ந்து, ஆந்திர கடல் பகுதியில் நிலைகொண்டது. அதன் காரணமாக, ஆந்திர மாநில வட கடலோர மாவட்டங்களில் புதன்கிழமை காலையில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. புயல் காரணமாக ஆந்திரம், ஒடிஸா மற்றும் மேற்கு வங்க மாநில கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களான ஸ்ரீகாகுளம், பபாத்லா, ஓங்கோல் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை 10 மி.மீ. முதல் 65 மி.மீ. வரை மழை பதிவானது. திருப்பதி, நெல்லூா் மாவட்டங்களில் புதன்கிழமை காலையில் மழை பெய்தது.

இந்நிலையில், ‘அசானி’ புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மச்சிலிப்பட்டினம்-நா்சாபுரம் இடையே புதன்கிழமை இரவு கரையைக் கடந்ததாக ஆந்திர பேரிடா் மேலாண்மை ஆணைய இயக்குநா் பி.ஆா்.அம்பேத்கா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: ‘அசானி’ கரையைக் கடந்தாலும் ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், மிதமானது முதல் பலத்த மழை பெய்யும். மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com