அரசின் தவறான கொள்கைகள் பணவீக்க உயர்வை மேலும் அதிகரிக்கச் செய்வதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், கட்சியைப் பலப்படுத்துவது, அமைப்பு ரீதியாக சீர்திருத்தம் கொண்டு வருவது குறித்து விவாதிக்கும் 'சிந்தன் ஷிவிர்' எனும் 3 நாள் ஆலோசனைக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டத்தின்போது பொருளாதாரம் குறித்து விவாதிக்க ப. சிதம்பரம் தலைமையில் பொருளாதாரக் குழுவை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
இந்த நிலையில், ப. சிதம்பரம் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
"இந்தியப் பொருளாதார நிலை மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. பெருந்தொற்றுக்குப் பிந்தைய மீட்சியானது சிறப்பானதாக இல்லை.
இதையும் படிக்க | பொதுச்செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்களுடன் ராகுல் சந்திப்பு
பணவீக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அரசு தனது தவறான கொள்கைகள் பணவீக்க உயர்வை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
உலக நாடுகளில் நிலவும் சூழல் பொருளாதாரத்திற்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இந்த நீட்சிகளைக் கையாள்வதற்கான வழிகள் குறித்து தெரியாமல் அரசு திண்டாடுகிறது.
மத்திய-மாநிலங்கள் நிதி உறவுகள் குறித்த விரிவான மதிப்பாய்வுக்கான நேரம் கனிந்துள்ளது. மாநில நிதி நிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமாக உள்ளது.
உலகளாவிய மற்றும் உள்நாட்டு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பொருளாதாரக் கொள்கைகளை மீட்டமைப்பது பற்றி சிந்திப்பது அவசியமானது" என்றார்.