பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சரண்ஜித் சிங் சன்னியை அக்கட்சியை சேர்ந்த மற்றொரு மூத்த தலைவரான சுனில் ஜாக்கர் கடுமையாக விமரிசித்து பேசியிருந்தார்.
இதையடுத்து, கட்சியை மீறி செயல்பட்டதாகக் கூறி விளக்கம் கேட்டு ஜாக்கருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், கட்சியிலிருந்து அவர் விலகியுள்ளார். பேஸ்புக் நேரலையில் தனக்கு எதிராக நடவடிக்கை எடுத்த தலைவர்களை சாடிய அவர், "குட்பை அண்ட் குட்லக், காங்கிரஸ்" என பேசியுள்ளார்.
பாஜகவை எதிர்ப்பதற்காக கட்சியை ஒருங்கிணைக்கும் நோக்கில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் மாநாடு நடத்திவரும் நிலையில், ஜாக்கர் கட்சியிலிருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.