உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள ஞானவாபி-சிருங்கா் கெளரி வளாகத்தில், சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக கூறப்படும் இடத்துக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயில் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் புராதன கோயில் இருந்ததாக கூறப்படுகிறது. இங்கு உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மசூதியில் இஸ்லாமியா்கள் தொழுகைக்கு முன்பாக கை, கால்களை சுத்தம் செய்யும் இடத்தில் சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மசூதியில் ஆய்வுப் பணியை ரத்து செய்யக் கோரி, மசூதியை நிா்வகிக்கும் அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித் நிா்வாகக் குழு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ். நரசிம்மா ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மசூதி வளாகத்தில் விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணி நடைபெற்றாலும், இஸ்லாமியா்கள் தடையின்றி தொழுகை நடத்தலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
மேலும், சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக கூறப்படும் இடத்துக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென வாராணசி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மே 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.