ராம்பன் மருத்துவமனையில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை மீண்டும் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில், சரியான மருத்துவ வசதியின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
ஜம்முவின் பனிஹாலில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் திங்கள்கிழமை காலை பஷரத் அகமது குஜ்ஜார்- ஷமீமா பேகத்திற்கு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் நசீர் ஹுசைன் சௌத்ரி, குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் காலை 6.30 மணியளவில் இறந்ததாகத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஹாலன் கிராமத்தில் குழந்தையை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்து, குழந்தையைப் புதைத்தனர்.
ஹாலன் கிராமத்தில் உள்ள உள்ளூர் மக்கள் தங்கள் கல்லறையில் அடக்கம் செய்வதை எதிர்த்த நிலையில், குடும்பத்தினர் கல்லறையைத் தோண்ட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
தோண்டியபோது குழந்தை மூச்சு விடுவதைக் கண்டவுடன், உடனே குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குறைமாத குழந்தை, சுவாசக் கோளாறுடன் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதித்தனர். ஆனால் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனை பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், ஸ்ரீ நகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதுதொடர்பாக குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு, எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிறந்த குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாக தவறாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்முவில் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம், செவ்வாய்க்கிழமை 4 பேர் கொண்ட குழுவை அமைத்து, பனிஹால் சமூக சுகாதார மையத்திற்கு எதிரான புகாரை விசாரித்தது.
ஜம்முவின் உதவி இயக்குனர் சஞ்சய் துர்க்கி தலைமையிலான குழு 2 நாள்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.