ஹிமாச்சலப் பிரதேசத்தில் மாநில அரசின் பேருந்து போக்குவரத்தில் பெண்களுக்கு 50 சதவிகிதம் கட்டண சலுகை வழங்குவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற 75வது ஹிமாச்சல் தின விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மாநில பேருந்து போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களுக்கு உதவும் வகையில் பெண்களுக்கான பேருந்து கட்டணம் 50 சதவிகிதம் குறைக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் அறிவிப்பிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மேலும் 360 புதிய பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன.
இதையும் படிக்க | ஐநாவின் அறிவுறுத்தலை நிராகரித்த தலிபான்கள்
இவை மட்டுமல்லாது பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மே 1ஆம் தேதி முதல் கட்டணமில்லா குடிநீர் இணைப்பும் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடப்பாண்டு இறுதியில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.