பஞ்சாப்பில் 424 முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் முக்கியப் பிரமுகர்கள் 424 பேருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றுள்ளது. இந்த புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.
இந்த 424 பேரில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் அடங்குவர்.
கடந்த ஏப்ரல் மாதம், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் பிற தலைவர்கள் உள்பட 184 பேரின் பாதுகாப்பை பஞ்சாப் அரசு திரும்பப் பெற்றது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, கேப்டன் அமரீந்தர் சிங்கின் மகன் ரனீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ பர்தாப் சிங் பஜ்வாவேரின் மனைவி ஆகியோரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு கடந்த மாதம் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.