சீனர்களுக்கு விசா வழங்கியதில் ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகப் பதிவான வழக்கில் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிபிஐ விசாரணைக்கு இன்று (சனிக்கிழமை) ஆஜராகியுள்ளார்.
இந்தியாவில் பணியாற்ற சீனர்களுக்கு விதிமுறைகள் மீறி விசா வழங்க கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனைக் கைது செய்தது. மேலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
இதையும் படிக்க | போனி கபூருக்கு இந்த நிலைமையா? மோசடியால் ரூ. 4 லட்சம் இழப்பு
தில்லியில், கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சிபிஐ முன் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் முறையே 9 மற்றும் 8 மணி நேரம் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்கு மூன்றாவது நாளாக கார்த்தி சிதம்பரம் இன்று (சனிக்கிழமை) ஆஜராகியுள்ளார். அப்போது பேசிய அவர், "டெஸ்ட் ஆட்டம் 5 நாள்களுக்கு நடைபெறும். இது 3-வது நாள்தான். நான் மக்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவரது பதிலுக்காகக் காத்திருக்கிறேன்" என்றார்.
முன்னதாக, தனது வீட்டில் சிபிஐ சோதனையின்போது நாடாளுமன்ற நிலைக் குழு தொடர்பான ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தனக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.