பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரின் கிரெடிட் கார்டை தவறாகப் பயன்படுத்தி ரூ. 3.82 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
போனி கபூரின் வங்கிக் கணக்கிலிருந்து பிப்ரவரி 9-ம் தேதி ரூ. 3.82 லட்சம் மோசடியாக பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்த போனி கபூர், சம்பந்தப்பட்ட வங்கியிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டிருக்கிறார்.
இதன்பிறகு, அவர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். மும்பையிலுள்ள அம்போலி காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷியா தீவிரத் தாக்குதல்
கிரெடிட் கார்ட் தகவல்களை தன்னிடம் யாரும் கேட்கவில்லை என்றும், இதுதொடர்பாக எந்த அலைபேசியும் வரவில்லை என்றும் போனி கபூர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
போனி கபூர் கிரெட்டி கார்டை பயன்படுத்தும்போது அதன் தரவுகளை யாரேனும் சேகரித்திருக்கலாம் என காவல் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அவரது கார்டிலுள்ள பணம் குருகிராமிலுள்ள ஒரு நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.