காங்கிரஸ் நாட்டை 55 ஆண்டுகள் ஆட்சி செய்தும் வறுமையை ஒழிக்கத் தவறி விட்டதாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று (மே 29) தாக்கிப் பேசியுள்ளார்.
சம்பவாத் தொகுதியின் இடைத்தேர்தல் வருகிற மே 31ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, தன்கபூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது,” காங்கிரஸ் கட்சியினர் நாட்டை 55 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்தனர். அவர்களின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் வறுமை ஒழிக்கப்படும் என பலமுறைக் கூறியும் நாட்டில் அவர்களால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நூறு சதவிகிதம் மக்கள் வாக்களிக்க வேண்டும். ” என்றார்.
உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்த போதிலும் புஷ்கர் சிங் தாமி கதிமா தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட புவன் சந்திர கப்ரி என்பவரிடம் 6,579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனையடுத்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் கைலாஷ் கெட்டோரி சம்பவாத் தொகுதியிலிருந்து தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதன் மூலம் அந்தத் தொகுயில் புஷ்கர் சிங் தாமி போட்டியிடுகிறார்.